இலவம் பஞ்சில் துயில்

ஆத்திச்சூடிநீதிகதைகள்

26.இலவம் பஞ்சில் துயில்

சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

அந்த  99 பூக்களில் இலவமும்  ஒன்று..

இலவம் சாரல்களில் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற்காலமே இது பூத்துக் குலுங்கும் காலம். அப்போது இலை தெரியாத அளவிற்கு மரமே பூவால் நிறைந்~திருக்கும்.இலவம்பூ சிவப்புநிறத்தில் இருக்கும். இதனை `எரிப்பூ இலவம்' என்றும், `எரிவுருவுறழ இலவம் மலர்' என்றும் புலவர்கள் பாடுகின்றனர். இதன் இதழ்கள் பெரிதாக இருக்கும். கோங்கின் நுண்தாது இதன்மீது படும்போது, பவளச் செப்பில் பொன் துகள் சொரிந்ததைப் போன்று காட்சியளிக்கும்

மனம் அல்லது உடலானது, அதிக உழைப்பின் நிமித்தம் சோர்வடையும் பச்சத்தில் உறக்கம் நம்மை தானாக தழுவுகிறது. இத்தருனத்தில், நாம் உடலளவில் எந்த வேலையையும் செய்வதில்லை. இருப்பினும், உறக்கத்தின் பொழுது, பல மிகமுக்கிய உடற்செயல்கள் நம் உடலில் நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆம், ஞபகத்திறனை ஒருங்கினைத்து நம்முள் சேர்த்து வைப்பதில் உறக்கம் முக்கிய பங்கு வகிக்கிறதாம். அதாவது, பகல் பொழுதில் நாம் பார்க்கும், கற்கும், உணரும், பலவற்றை, உறங்கும் பொழுது நம் உடல் தகவல்களாக தொகுத்து, வகுத்து நம் மூலையில் பதிவேற்றம் செய்கிறதாம். அளவான உறக்கம் நம்முடைய கல்வி மற்றும் ஞாபகத்திறனை சிறப்பாக்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தசை வளர்ச்சிக்கும், திசுக்கள் சீரமைப்பிற்கும், முக்கியமான ஹார்மோன்கள் உருவாக்கப்படுவதற்கும் போதுமான கால அளவு உறக்கம் மிகமிக இன்றியமையாதது. வாழ்வின் அங்கமான, இச்செயலை எப்படி செய்ய வேண்டும்? எல்லவற்றையும் வகுத்து சென்றுள்ள நம் முன்னோர்கள் இதற்கு வழிமுறை சொல்லாமல் இருப்பாரோ? வாருங்கள் பார்ப்போம்.

எப்படி உறங்க வேண்டும்? என்பதை பின்வருமாறு சொல்லியிருக்கிறார் நம் ஒளவை பாட்டி.

இலவம் பஞ்சில் துயில்

இதன் விளக்கம் பின்வருமாறு. ‘இலவம் பஞ்சு‘ எனும் ஒருவகை இயற்கை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையில் உறங்க வேண்டும். உறங்குவதற்கு கோரை பாய், கயிற்று கட்டில் உள்ளிட்ட எத்தனையோ முறை இருந்த பொழுதும், இலவம் பஞ்சு படுக்கையில் உறங்க சொன்னதர்கு காரணம் என்ன? பருத்தி இழைகளும் மிருதுவானவைகளே! ஆயினும், பருத்தியை சொல்லாமல், இலவம் பஞ்சை குறிப்பிட்டு சொன்னதர்க்கு காரணம் என்ன? சொன்னது ஒளவை ஆயிற்றே! காரணம் இல்லாமல் இருக்குமா? வாருங்கள், இன்றைய அறிவியல் உலகம் இலவம் பஞ்சு பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

இலவம் பஞ்சானது, ‘இலவு‘ எனும் வெப்ப மண்டலத்துக்குறிய மரத்திலிருந்து கிடைக்கும் பொருளாகும். இலவு மரம் காய்த்தாலும், கணிக்காது. காரணம், காய் நெற்றாகி (முதிர்ந்து காய்ந்த காய்) இலவம் பஞ்சினை தந்துவிடும். இது, மென்மை (பருத்தியை விட), வழுக்கும் தன்மை, சுருங்கா தன்மை, உயிரி சிதைவு அடைதல், மிகக்குறைந்த ஒவ்வாதன்மை மற்றும் குறைந்த எடை (பருத்தியை விட சுமார் எட்டு மடங்கு குறைந்தது) உள்ளிட்ட பல சாதகமான பண்புகளை பெற்றிருக்கிறது. இப்பஞ்சினால் செய்யப்பட்ட தலையணிகள் மற்றும் மெத்தைகளின் பயன்களை ஒவ்வென்றாக பார்க்கலாம்.

இயற்கையாக வலரும் இலவு மரத்திலிருந்து கிடைக்கும் இலவம் பஞ்சினை எடுத்து நேரடியாக தலையணைகளோ அல்லது படுக்கை மெத்தைகளையோ செய்ய முடியும். செயற்கை பஞ்சு இழைகளை போல், எந்தவித வேதிமாற்றத்திற்கும், இலவம் பஞ்சினை உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. செயற்கை பஞ்சுகளை காட்டிலும், இயற்கையான இலவம் பஞ்சு நம் உடலுக்கு நல்லது தானே?

அடுத்து இலவம் பஞ்சின் மருத்துவ குணத்தை பற்றி குறிப்பிட வேண்டும். இப்பஞ்சானது அதிக அளவு செல்லுலோஸ், பென்டோஸ் மற்றும் லிகினின் எனும் வேதிபொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லிகினின் எனும் வேதிபொருளால், பூச்சிகள், இலவம் பஞ்சினை அண்டுவதில்லையாம். மெழுகு தன்மை கொண்ட பொருளின் நிமித்தம், இலவம் பஞ்சு நீர் ஒட்டா தன்மையை பெற்றிருக்கிறது. இதனால், பூஞ்சைகளும் இலவம் பஞ்சினை தாக்குவதில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், அழுக்குகளும் இவற்றுடன் ஒட்டுவதில்லை. ஒருவேளை அழுக்கு படிந்தாலும், அவற்றை எளிதில் துடைத்து விடலாம். தவிர, இலவம் பஞ்சு எதிர் நுண்ணுயிர் (பாக்டீரியா) பண்பினை பெற்றிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தீங்கிழைக்கும் பாக்டீரியாங்களை கொல்லும் திறனை இலவம் பஞ்சு பெற்றிருக்கிறது. இதனால், பாக்டீரியாங்கள் எதுவும், இவற்றில் வளருவதில்லை. எனவே, நமக்கு நோய் வராமல் தடுப்பதுடன், ஒரு சில உடல் உபாதைகளான, தலைவலி, கழுத்துவலி, தசைபிடித்தம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளும் குணமாவதாக கூறப்படுகிறது. எனவே, இலவம் பஞ்சினாலான படுக்கையானது, மருத்துவ ரீதியிலும் மிக சிறந்தது.

இலவம் பஞ்சின் மிருதுவான தன்மையும் நமக்கு நன்மையே! பொதுவாக, நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நேர்த்தியான தூக்கம் அவசியம். அதாவது, உறங்கும் பொழுது, தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு உள்ளிட்ட உடற் பாகங்கள் சமதளத்தில் இருப்பது அவசியம். இலவம் பஞ்சு படுக்கையில் இது சாத்தியம் என்கின்றனர் அறிஞர்கள். இலவம் பஞ்சு மிகவும் மிருதுவாக இருப்பதால், உறங்கும் நிலைகளில், நமது உடலுக்கு தகுந்த பாதுகாப்பை தருவதால், நேர்த்தியான உறக்கத்தை நம்மால் பெறமுடிகிறது.

இலவம் பஞ்சு இழைகள், உள்ளீடற்ற அமைப்பை (உதாரணம்: குழாய்கள்) பெற்றுள்ளன. இதன் காரணமாக, இது ஒலியை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன.

இலவம் பஞ்சு படுக்கைகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். நீர் ஒட்டா தன்மையால், இலவம் பஞ்சு படுக்கைகளை நீரில் துவைத்து சூரிய ஒளியில் உளர்த்தி கொள்வதும் எளிது.

குறிப்பாக, கோடைகாலத்தில் இலவம் பஞ்சு படுக்கைகளையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். காரணம், இலவம் பஞ்சு உடல் சூட்டை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால், உஷ்ண நோய்கள் தடுக்கப்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கும் பொருள் என்பதால், இறுதியில் இலவம் பஞ்சினை சூழ்நிலையில் வெளியேற்றினாலும், எந்தவித சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மேற்கண்ட நன்மைகளால், இலவம் பஞ்சினாலான படுக்கைகளை பயன்படுத்தும்படி அறிவுருத்துகிறது இன்றய நவீன அறிவியல் உலகம்.

சரி, இலவம் பஞ்சை காட்டிலும், பருத்தி இழைகள், படுக்கைகள் செய்வதற்கு ஏற்றதா? என்ன சொல்கிறது அறிவியல்? பார்ப்போம்.

ஏற்கனவே, பார்த்தார் போல், பருத்தியைவிட, மிக்குறைந்த எடை, மற்றும் மிருதுவானது இலவம் பஞ்சு. இலவம் பஞ்சு போன்றே, பருத்தியும், உயிரி சிதைவு அடையும் என்றாலும், நீர் உறிஞ்சும் பண்பின் காரணமாக, பருத்தியினாலான படுக்கைகள் எளிதில் அழுக்காகும் வாய்ப்பு உண்டு. மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாங்கள் உள்ளிட்ட தீங்கிழைக்கும் காரணிகள், எளிதில் தாக்கும் நிலையும் உண்டாகிறது. இதனால், பருத்தியினாலான படுக்கைகளை அடிக்கடி துவைத்தல் வேண்டும். எனவே, இலவம் பஞ்சை காட்டிலும் பருத்தியின் (படுக்கை பொருளாக) பயன்பாட்டு காலம் குறைவு. இக்காரணங்களால், பருத்தியை காட்டிலும், இலவம் பஞ்சே படுக்கைகள் செய்வதற்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது.

ஆத்திச்சூடி இயற்றிய ஒளவை சோழர் காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதாவது, பன்னிரெண்டாம் நூற்றாண்டை குறிக்கிறது. இன்றைய அறிவியல் உலகம் ஆராய்ந்து அறிவிப்பதை, நவீன அறிவியல் வளர்ச்சி அடையாத அக்காலத்திலேயே, ஒளவை பாட்டி, இதனை உணர்ந்து நமக்கு அறிவுறுத்தியிருப்பது வியக்க தக்கதாக உள்ளது

Comments